வவுனியாவில் ஆலயத்திற்குள் வாள்வெட்டு: மூவர் படுகாயம்(Photos)
வவுனியா, பொன்னாவரசன்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவின் போது ஆலயத்திற்குள் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வாள்வெட்டு சம்பவம் இன்று(09) இடம்பெற்றுள்ளது.
ஆலயத்திற்குள் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் மற்றும் அடிதடி காரணமாக மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆலய திருவிழா
பொன்னாவரசன்குளம் பிள்ளையார் ஆலய திருவிழாவில் நேற்று (08) மாலை ஆலயத்தில் நின்ற சிலருக்கும், ஆலய பகுதிக்கு வந்த பிறிதொரு குழுவினருக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்று (09) ஆலயத்தில் கொடி இறக்குவதற்கான பூசைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அங்கு வந்த குழுவினருக்கும், ஆலயத்தில் நின்றவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதுடன், வாள் வெட்டுத் தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 3 பேர் வவுனியா வைத்தியசாலையல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
ஆலய நிர்வாகனத்தினர் உட்பட ஆண்கள், பெண்கள் உள்ளடங்கலாக 20 பேர் வரையில் நெளுக்குளம் பொலிஸாரால் அழைத்து செல்லப்பட்டு அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இருந்து பொலிஸாரால் வாள்களும் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ஆலய தலைவரை விடுவித்த பின்னரே ஆலயத்தின் கொடி இறக்கப்படும் எனத் தெரிவித்து அப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முன் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று
வருவதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் நெளுக்குளம் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.



