இலங்கை பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்த உதவியதாக கூறப்படும் தூதரக அதிகாரி பணியிடை நீக்கம்..!
இலங்கை பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தூதரக அதிகாரி பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஓமானில் இலங்கைப் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஓமானுக்கு அழைத்து செல்லப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த நிலை
வீட்டுப் பணிப்பெண் தொழில் பெற்றுத் தருவதாக கூறி ஓமானுக்கு அழைத்து சென்று அங்கு இலங்கைப் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைப் பெண்களை வரிசைப்படுத்தி, ஏலத்தில் விடுவது போன்று, அந்நாட்டவர்கள் தெரிவு செய்வதற்கு உதவியதாக இந்த அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரியின் பணி இடைநிறுத்தப்பட்டதுடன், அவரை உடனடியாக நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோத நடவடிக்கை
இந்த சட்டவிரோத நடவடிக்கையுடன் தொடர்புடைய உள்நாட்டு முகவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
டுபாய் மற்றும் அபுதாபிக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லும் இலங்கைப் பெண்கள் அங்கிருந்து ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட 45 இலங்கைப் பெண்கள் மீட்கப்பட்டு ஓமானில் பாதுகாப்பாக இடமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.