இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக கடும் போக்கு: நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ள இலங்கை
வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் இலங்கை அரசாங்கம், தனது நிலைப்பாட்டை மீண்டும் இந்தியாவிடம் வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பில் (Colombo) எதிர்வரும் செவ்வாய்கிழமையன்று நடைபெறும், இந்திய-இலங்கை கூட்டுச் செயற்குழுவின் ஆறாவது கூட்டத்தில் இலங்கை தமது நிலைப்பாட்டை தெரிவிக்கவுள்ளது.
இலங்கையின் கடல் வளங்கள்
வடக்கில் 400-500 இந்திய அடிமட்ட இழுவை படகுகள் வாரத்தில் மூன்று நாட்கள் இலங்கையின் கடல் வளங்களை சுரண்டுவதை அனுமதிக்க முடியாது என கடற்றொழில் அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம். விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவும், அவர்களின் படகுகளை புதிய சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யவும் அமைச்சகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது
அத்துடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு அதிக அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாகவும் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் செவ்வாயன்று நடைபெறவுள்ள இந்திய- இலங்கைக் கூட்டத்தில் இந்தியக் குழுவில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மாநில அரசின் மூத்த அதிகாரிகள் இடம்பெறுவார்கள்.
இதேவேளை 2016 முதல், இந்திய-இலங்கை கூட்டுச் செயற்குழுவின் ஐந்து சுற்றுகள் நடத்தப்பட்டுள்ளன. இறுதியாக 2022 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி இலங்கையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |