இலங்கை அரசியலில் தீர்மானமிக்கதாகும் இவ்வாரம்: நாட்டின் புதிய பிரதமர் யார்..! அதிகாரம் ஜனாதிபதி கையில்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்றைய தினம் மீண்டும் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுவதுடன், இதன்போது தற்போதைய நெருக்கடி நிலை குறித்து ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சகல கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற ரீதியில் முழுமையாக இணக்கம் தெரிவிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்திருந்தார்.
அதன்படி பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் ஊடாக தெரியப்படுத்தியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி, அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் கட்சித் தலைவர்களுக்கும் ஆளும் தரப்பின் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி குறித்த சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதும், அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் தலைவர்களுடன் மாத்திரமே குறித்த தினத்தில் சந்திப்பு நடத்தப்பட்டிருந்தது.
கூட்டத்தை தொடர்ந்து, புதிய பிரதமருடன் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய பேச்சுவார்த்தையில் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையிலேயே இன்றைய தினமும் முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், விலை அதிகரிப்புகளும் அந்த போராட்டங்களுக்கு எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போல் அமைந்துள்ளன.
இந்த நிலையில் புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என அரசாங்கத்திற்குள்ளும், அரசாங்கத்திற்கு வெளியேயும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் அரசாங்கத்தையும், பிரதமரையும் நீக்கி இடைக்கால அரசாங்கத்தை முன்னெடுப்பதற்கான பிரேரணை மாநாயக்க தேரர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் தான் பதவி விலகப் போவதில்லை என தொடர்ந்தும் கூறி வந்த பிரதமர் மகிந்த ராஜபக்ச தற்போது திடீரென பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தான் இணங்க தயார் என அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன, குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அறிவிப்பிற்கு பின்னர் இந்த செய்திகள் வெளியாகி வருகின்றன.
அதன்படி, ஜனாதிபதி எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நேற்று இடம்பெற்றதாக கூறப்படும் கலந்துரையாடலின்போது அவர் இதனை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
20வது திருத்தச் சட்டத்தின் கீழ் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாக மகிந்த ராஜபக்ச இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனடிப்படையில் பார்த்தால் இவ்வாரம் இலங்கை அரசியலில் தீர்மானம் மிக்கதாக அமையும் சாத்தியம் அதிகமாகவே காணப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி பெரும்பாலும் இவ்வாரத்தில் மகிந்த ராஜபக்ச பதவி விலகி அல்லது பதவி விலக்கப்பட்டு அதன்பின் புதிய பிரதமர் நியமனத்துடன் இடைக்கால அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை உள்ளிட்ட விடயங்களும் இந்த வாரத்தில் கொண்டு வரப்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
