மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆறு வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி சுகாதார பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் ஆறு வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 11ஆம் திகதி கிரான்குளத்தில் ஒருவர் மரணமானதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் பெருமளவானோர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட கோவிட் செயலணி கூட்டத்தில் குறித்த பகுதியை முடக்குவதற்கான பரிந்துரைகள் தேசிய கோவிட் செயலணிக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இதனடிப்படையில் கிரான்குளம் கிராமசேவகர் பிரிவு சி பிரிவிலுள்ள நெசவு நிலைய வீதி, வேலாப்பொடி வீதி, கண்ணனி அம்மன் ஆலையவீதியும், கிரான்குளம் கிராமசேவகர் பிரிவு பி பிரிவிலுள்ள லோக்றோட் வீதி, விதானையார் வீதி, அப்புகாமி வீதிகள் ஆகிய வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் பொலிஸாரும், படையினரும், பொதுச்சுகாதார பரிசோதகர்களும் இன்று காலை இணைந்து குறித்த பகுதியை தனிமைப்படுத்தியுள்ளதுடன் ,அப்பகுதியில் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.






