காத்தான்குடி பிரதேசத்தில் ஆறு கொரோனா நோயாளர்கள் அடையாளம்!
மட்டக்களப்பு - பெரியகல்லாறு கிராமத்தில் அக்கரைப்பற்றுடன் தொடர்புடைய ஒருவருடைய வீட்டில் 5 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொண்டபோது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அருகாமையில் உள்ள வீட்டில் இருவருமாக மொத்தமாக இதுவரையில் 16 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களென இனங்காணப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி இன்று அவசரமாகக் கூடியதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கருத்துத்தெரிவிக்கையில்,
இது தவிர நேற்றைய தினம் காத்தான்குடி பிரதேசத்தில் 6 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட கொரோனா செயலணி இன்று அவசரமாகக் கூடியிருந்தது.குறித்த பிரதேசங்களை எவ்வாறு கையாள்வது அல்லது தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிப்பதா என்பவை தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.
இதனடிப்படையில் சுகாதாரத் துறையினர் நாளை (28) திகதி கல்லாறு மற்றும் காத்தான்குடி பகுதிகளில் சுமார் 100 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.
இந்தப் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையிலேயே தீர்மானங்களுக்கு வரலாம். தற்போதைய நிலையில் தனிமைப்படுத்தல் அவசியமில்லை.
இருப்பினும் பொது மக்களின் நடமாட்டத்தைக் குறைப்பதற்கான பல்வேறு ஆலோசனைகளையும் இதன்போது வழங்கியிருந்தோம் .
இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களை அழைத்து கிராமிய மட்டத்திலுள்ள விழிப்புணர்வு குழுக்களின் ஊடாக இந்த தகவல்களைப் பரிமாறி பொதுமக்களின் நடமாட்டத்தை, சுகாதார நடைமுறைகளைக் கைக்கொண்டு தங்களுடைய நாளாந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தவிர மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த இருவரது உடல்கள் தேங்கியிருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் இங்கு தெரிவித்திருந்தார்.
உயிரிழந்த இருவரில் ஒருவருடைய சடலத்தை உறவினர்கள் இருவர் பார்வையிட்டுச் சென்றுள்ளதாகவும், சுற்று நிருபத்தின்படி கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடலை அந்த குடும்பத்திலிருந்து இருவர் அல்லது ஒருவர் பார்வையிட்டதன் பின்பு தான் தகனக்கிரியைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கிணங்க, இருவர் வருகை தந்து பார்வையிட்டுச் சென்றுள்ள சடலத்தைத் தகனக்கிரியை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் மற்றைய சடலத்தைத் தொடர்ந்து வைத்தியசாலை பிணவறையில் பேணுவதாகவும் குறிப்பிட்டார்.
சடலத்தை எரியூட்டுவதற்கான வசதி மட்டக்களப்பில் இல்லாமையினால் அருகில் அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலே குறித்த வசதி உள்ளது.
இதனடிப்படையில் அந்த உடலைத் தகனக்கிரியை மேற்கொள்வதற்காக பொலன்னறுவை மாவட்டத்தைத் தெரிவு செய்திருப்பதாகவும் , அங்கு இந்த உடலை அனுப்பவிருப்பதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்ததாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.