தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைத் தொடர்பில் அவதானம் செலுத்தி வருகின்றோம்! கஜேந்திரகுமார்
தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைத் தொடர்பில் தொடர்ந்து அவதானம் செலுத்தி வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து தமது கட்சி அரசியல் கைதிகளின் தேக ஆரோக்கியம் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாக, அந்த கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு சுகாதார பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு உதவும் நோக்குடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு இன்றைய தினம் வெலிக்கட சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது.
எவ்வாறெனினும், சிறைச்சாலை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக காணப்படுவதால் கைதிகளை பார்வையிடவோ உள்ளே செல்வதற்கோ தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியிருக்கவில்லை.
எவ்வாறெனினும் கைதிகளின் உடல் நிலைக் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபை மேயராக தெரிவாகியுள்ள மணிவண்ணன் விஸ்வலிங்கம் கொள்கையில் இருந்து விலகி வேறு நிகழ்ச்சி நிரலுடன் செயற்படுவதாகவும் ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.