சினோபெக் வணிக நடவடிக்கை: நாட்டின் எரிபொருளுக்கு நிலையான விலை
இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள சர்வதேச எரிபொருள் நிறுவனமான சினோபெக்கின் வணிக நடவடிக்கைகளை தொடர்ந்து, எரிபொருளுக்கு நிலையான விலைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல் தரப்புகள் தெரிவிக்கின்றன.
அதன்படி எரிபொருளுக்கான நிலையான ஆகக்குறைந்த மற்றும் ஆகக்கூடிய விலையை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளன.
சினோபெக் நிறுவனம் இலங்கையில் எரிபொருளை விநியோகிக்கும் ஒப்பந்தத்தில் ஏற்கனவே கைச்சாத்திட்டுள்ளது. சினோபெக்கிற்கு நாட்டில் இயக்கப்படும் 150 எரிபொருள் நிலையங்கள் ஒதுக்கப்படும். இதுதவிர, இரண்டு வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களுக்கு நாட்டில் செயல்பட அனுமதி வழங்கப்படவுள்ளது.
தற்போது, அரசுக்குச் சொந்தமான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகிய நிறுவனங்களே நாட்டில் எரிபொருள் வினியோகஸ்தர்களாக உள்ளன.
QR குறியீட்டு
இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியதும் எதிர்காலத்தில் விலை சூத்திரத்தின்படி ஆகக்குறைந்த மற்றும் ஆகக்கூடிய நிலையான விலை அறிமுகப்படுத்தப்படும் என்று அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல் தரப்புகள் தெரிவிக்கின்றன.
நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் போட்டித்தன்மையுடன் இருக்க வேண்டும். இருப்பினும், விரைவில் கடுமையான விலைக் குறைப்பை நாங்கள் எதிர்பார்க்க முடியாது, என்று அந்த தகவல் தரப்பு தெரிவித்துள்ளது.
எரிபொருள் ஒதுக்கீட்டுக்கான QR குறியீட்டு முறையிலிருந்தும் அரசாங்கம் விரைவில் விலகும் என்றும் கூறியுள்ளது.
இதற்கிடையில், RM Parks-Shell நிறுவனம் எதிர்வரும் 8ஆம் திகதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் பின்னர் இலங்கையில் எரிபொருள் வர்த்தகத்தைத் தொடங்கும்.
முக்கிய மசகு எண்ணெய் வினியோகஸ்தரான சவூதி அரேபியா, விநியோகத்தைக் குறைக்க முடிவு செய்ததால், உலக சந்தையில் எரிபொருள் விலை உயர வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |