பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் கையெழுத்து போராட்டம்(Video)
யாழ்ப்பாணம்
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராகக் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் திருநெல்வேலியில் இடம்பெற்றிருந்தது.
திருநெல்வேலி பொதுச் சந்தைக்கு முன்பாக இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற கையெழுத்துப் போராட்டத்தில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் கலந்து கொண்டதுடன் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள்,தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டு கையெழுத்துக்களைப் பதிவு செய்திருந்தனர்.
கிளிநொச்சி
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம் பல பகுதிகளிலும் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு ஸ்கந்தபுரம் பொதுச் சந்தையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளரும் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் பொதுச் செயலாளருமான சுப்பிரமணியம் சுரேன் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள் கட்சியின் பிரதேச அமைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



