இலங்கை பல்கலைக்கழகங்களின் நிலைமை குறித்து வெளியான முக்கிய தகவல்!
இலங்கையில் உள்ள பல்கலைக்கழக கட்டமைப்பில் தற்போது ஐம்பது சதவீத விரிவுரையாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் பிரகீத் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
பற்றாக்குறை
சுமார் 13,000 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இருக்க வேண்டிய, இலங்கை பல்கலைக்கழக கட்டமைப்பில் தற்போது 6,500 விரிவுரையாளர்கள் மட்டுமே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளில் சுமார் 1,500 விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக கட்டமைப்பை விட்டு வெளியேறியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தில் மட்டும் சுமார் 150 விரிவுரையாளர்கள் வெளியேறியுள்ளதாகவும், பல பல்கலைக்கழகங்களில் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் போன்ற பீடங்களில் நிலைமை மோசமாக உள்ளதாகவும் பேராசிரியர் பிரகீத் வீரதுங்க சுட்டிக்காட்டுகிறார்.
சூழ்நிலை
இந்த சூழ்நிலை காரணமாக, பல பட்டப்படிப்புகளின் கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் சிக்கல்கள் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு போதுமான வசதிகள் மற்றும் சம்பளம் இல்லாததே இந்த நிலைமைக்குக் காரணம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த பிரச்சினை மற்றும் பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள பல சிக்கல்கள் குறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கக் கூட்டமைப்பு தற்போது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளது.



