மட்டக்களப்பு நகரில் நாளை முதல் வர்த்தக நிலையங்களை திறக்க முடியும்!மட்டு.மாநகர முதல்வர்
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாக மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்கள் நாளை திங்கட்கிழமை திறக்க முடியும் எனவும்,சுகாதார திணைக்களம் பரிந்துரைத்துள்ள நடைமுறைகளுக்கு அமைவாகவே வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனை பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக உள்ளமையினால் அப்பகுதிக்குள் இருந்து வர்த்தக நடவடிக்கைகளுக்கு வர்த்தகர்கள் வருகை தரமாட்டார்கள்.
தைப்பொங்கல் வரவுள்ளதனால் வர்த்தக நிலையங்களை நடாத்துபவர்களும் வருகை தரும் மக்களும் சுகாதார நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
கடந்த நான்கு நாட்களாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய மூடப்பட்டிருந்தது.நாளை திங்கட்கிழமை அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டு தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
ஆனால் வர்த்தகர்கள் அனைவரும் சுகாதார திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகள் அனைத்தையும் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும்
குறிப்பாக சமூக இடைவெளியை பேணுதல் கைகழுவுதல் முகக்கவசம் அணிதல் போன்ற அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றுவதன் மூலமே தொடர்ச்சியாக வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
அனைத்து வியாபார நடவடிக்கைகளும் மாலை 7.00மணியுடன் நிறுத்தப்பட்டு சுகாதார திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு வழிவிட வேண்டும்.
இதேபோன்று சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக பூநொச்சிமுனை போன்ற பகுதிகளில் இருந்து ஊழியர்களோ வர்த்தகர்களோ இங்கு வந்து வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது.திணைக்கள தலைவர்கள் கூட அப்பகுதிகளில் இருந்து உத்தியோகத்தர்களை அழைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
நாங்கள் சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றாதவிடத்து மட்டக்களப்பு மாநகரத்திற்குள்ளும் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றது.இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.