போதைப்பொருள் சுற்றிவளைப்பில் துப்பாக்கிச்சூடு:இளைஞர் பலி
நெலுவ பொலிஸ் அதிகாரிகளின் சுற்றிவளைப்பின் போது பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மொறவக்க பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நெலுவ நகரப் பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இன்று (18) மாலை பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி பறிப்பு
இதன்போது அங்கிருந்த சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கைத்துப்பாக்கியை பறிக்க முயற்சித்த வேளை துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்த மேலும் மூன்று சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை நெலுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.