துமிந்த வழியில் தப்பியோடிய ஷிரந்தி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
தற்போது அங்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிகிச்சையின் அடிப்படையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், அவர் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பித்துக் கொள்ளவே இந்த வழிமுறையை பின்பன்றியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நிதி முறைகேடுகள்
ஏனெனில் சிரிலிய சவிய அறக்கட்டளையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, எதிர்வரும் 24ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சுமார் ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த அவர், அங்கிருந்து வெளியேறிய உடனேயே நேரடியாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
ஆரம்பத்தில் அவருக்கான அறிவித்தல் தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு அனுப்பப்பட்டிருந்தாலும், அவர் வெளிநாடு செல்லவிருப்பதை அறிந்த நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்திற்கு விரைந்தனர்.
அழைப்பாணை
அவர் விமானத்தில் ஏறவிருந்த தருணத்தில் அந்த அழைப்பாணை அவரிடம் கையளிக்கப்பட்டது. அவருடன் சென்ற உறவினர் ஒருவர் அவருக்கு பதிலாக அந்த ஆவணத்தைப் பெற்றுக்கொண்டார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரா படுகொலைக்கு தொடர்புடைய துமிந்த சில்வா, சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையிலும் நீண்ட காலம் தங்கியிருந்தார்.
அக்காலகட்டத்தில், வெளிநாட்டில் தங்கியிருக்கும் காலத்தை நீட்டிப்பதற்காக மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையின் அறிக்கைகளைப் பயன்படுத்தி, நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து தப்பித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.