இலங்கையிலிருந்து தூத்துக்குடிக்குக்கு சென்ற கப்பலின் சரக்கு பெட்டகத்திலிருந்து மீட்கப்பட்ட பொருள்
இலங்கையிலிருந்து தூத்துக்குடிக்கு மரத்தடிகளை ஏற்றி வந்த கப்பலின் சரக்கு பெட்டகத்திலிருந்து 9 கருப்பு நிற பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1000 கோடி பெறுமதியான கொக்கைன் போதைப்பொருள் நேற்று மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு வந்த சரக்கு கப்பல் ஒன்றில் கண்டெய்னர் மூலமாக கொக்கைன் போதைப்பொருள் கடத்த உள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதை தொடர்ந்து, புலனாய்வுத்துறை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, இலங்கையிலிருந்து தூத்துக்குடிக்கு 8 சரக்கு பெட்டகங்களில் மரத்தடிகளை ஏற்றி வந்த கப்பல் உள்ளே நிறுத்தப்பட்டிருந்தது.
மரத்தடிகள் கொண்டுவரப்படட்ட சரக்கு பெட்டகம் ஒன்றில் 9 கருப்பு நிற பைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த 9 பைகளில் மொத்தம் 400 கிலோகிராம் எடையுள்ள கொக்கைன் போதைப்பொருள் இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை அனுப்பியவர் மற்றும் அதை பெறுபவர் முகவரியை விசாரித்துள்ளனர். ஆனால் அவை போலியான முகவரிகள் என கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைன் போதைப்பொருளின் மதிப்பு சர்வதேச அளவில் சுமார் ரூ.1000 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.