இந்திய அரசின் நீதியற்ற செயற்பாடே சாந்தனின் மரணத்திற்கு காரணம் : தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம்
இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகளின் நீதி அற்ற செயற்பாடே சாந்தனின் மரணத்திற்கு காரணம் என தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் குறிப்பிட்டுள்ளது.
சாந்தனின் மரணம் தொடர்பாக தமிழ்த் தேசிய அவதானிப்பு மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டு 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவந்த நிலையில், இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் சிறப்பு முகாமில் ஒன்றரை ஆண்டுகள் அடைக்கப்பட்டார்.
இது, மாநில அரசுகளின் நீதிக்கு புறம்பான செயல் என்பதோடு இதுவே அவரின் மரணத்துக்கு மூலகாரணமாகவும் அமைந்துள்ளது.
மர்மங்கள் நிறைந்த வழக்கு
இந்தப் படுபாதகச் செயலை அவதானிப்பு மையம் வன்மையாகக் கண்டிக்கின்றது. நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட வெளிநாட்டு பிரஜை ஒருவரை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்க வேண்டியது ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் கடமையாகும்.
அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு வேறு வழியின்றி மருத்துவனைக்கு கொண்டு சென்றே ஆகவேண்டும் என்ற நிலை வரை அவரை சிறப்பு முகாமிலேயே தடுத்து வைத்திருந்தது சாந்தனை சிறப்பு முகாமிலேயே வைத்து சாக விடுவதற்கான சதித்திட்டமா என தோன்றுகிறது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கே பல மர்மங்கள் நிறைந்தது. கொலை வழக்கினைக் கையாண்ட பல பொலிஸ் உயர் அதிகாரிகள் தங்கள் ஓய்வுக்காலத்தில் எழுவருக்கு வழங்கப்பட்ட தண்டனை நீதிக்கு அப்பாற்பட்டது என அவர்கள் வேறு வழியின்றி திட்டமிட்டு குற்றவாளிகளாக்கப்பட்டனர் என ஊடகங்களில் கூறிவந்திருக்கின்றனர்.
அவ்வாறிருக்க, 32 வருடங்கள் சிறைவாழ்க்கையை அனுபவித்த ஒருவரை நீதிமன்றம் விடுதலை செய்தபின் சிறைச்சாலையை விட கொடுமையான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட கொடும் சிறப்பு முகாமில் அடைத்து வைத்து ஒழுங்கான உணவோ சீரான மருத்துவ வசதியோ கொடுக்காது உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் கடுமையான துன்பங்களைச் சந்திக்கும் அளவிற்கு அவரை ஒன்றரை வருடங்கள் சிறப்பு முகாமில் இந்திய மத்திய மாநில அரசுகள் இணைந்து தடுத்துவைத்திருந்ததன் உள்நோக்கம் என்ன ?
சாந்தன் தான் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், தனது தாய் நிலத்திலே வயது முதுமையுற்றிருக்கும் தனது தாயுடன் இறுதிக் காலத்தைக் களிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பிவைக்குமாறு நீதிமன்றத்தை நாடியபோது, நீதிமன்றமும் உடனடியாக சாந்தனை இலங்கைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டும் அவரை இலங்கைக்கு அனுப்பாது கால தாமதப்படுத்தியதன் உள்நோக்கம் என்ன ?
ஈழத்தமிழர்களின் குற்ற உணர்வு
சாந்தன் தீவிர நோய்வாய்ப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட முன்னர் உத்தரவிட்டிருந்தும் அதனை பெப்ரவரி 27 ஆம் திகதி வரை சாந்தனுக்கோ சாந்தனின் வழக்கறிஞருக்கோ தெரியப்படுத்தாது மாவட்ட ஆட்சியர் மறைத்து வைத்ததன் பின்னணி என்ன?
ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை சாந்தனை பழிவாங்குவதற்காக இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து அவரை படுகொலை செய்துவிட்டதாகவே கருதுகின்றனர்.
ஈழத்தமிழர்கள் சாந்தனைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்வோடு தங்களுக்குள் விம்மி வெடித்து நிற்கின்றனர்.
இந்த விடயத்தில் தீவிர தமிழ்த் தேசிய அரசியல் பேசும் அரசியல் தரப்புக்கள் சாந்தனையும் ஏனைய விடுதலை செய்யப்பட்டவர்களையும் மீட்பதற்கு எந்தவித நகர்வினையும் வெற்று அறிக்கைகள் மற்றும் சந்திப்புகளுக்கு அப்பால் மேற்கொண்டிருக்கவில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
ஆதாயம்
மேலும் சாந்தன் மரணமடைந்திருக்கக்கூடிய நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்ற மற்றைய மூவரையும் உடனடியாக விடுதலை செய்வதற்கும் அவர்களை இலங்கைக்கோ அவர்கள் விரும்பிய நாட்டிற்கோ அனுப்புவதற்குமான நடவடிக்கைகளில் மத்திய,மாநில அரசுகள் உடனடியாக ஈடுபட வேண்டும்.
தீவிர தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் சாந்தன் விடயத்தில் அதிகம்
பொறுப்புணர்ந்து செயல்படவில்லை.
விடுவிக்கப்பட்ட சாந்தன் நாட்டுக்குத் திரும்பினால் இலங்கைச் சட்டங்களின்
பிரகாரம் அவருக்கும் அவரை விடுவிக்க உதவும் தங்களுக்கும் ஆபத்து ஏற்படுமா என்ற
ஒரு பயம் அரசியல்வாதிகளிடம் இருந்திருக்கிறது.
ஒரு சிலர் அதனை வெளியில் சிலரிடம் கூறியுமிருக்கிறார்கள். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியோ அல்லது உரிய அமைச்சரிடம் உத்தியோக பூர்வமாக ஒரு பதிலை பெற்றிருக்க முடியும். ஆனால் அவர்கள் எமக்கு ஏன் வீண் வேலை என்பதுபோல் கள்ள மௌனம் காத்தார்கள்.
ஒரு சிலரோ அரசியல் ஆதாயத்திற்காக சாந்தனின் தாயாருடன் படம் எடுத்து தாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என பிரச்சாரம் மட்டும் செய்தார்கள்.
அடையாளப் போராட்டம்
இந்த விடயத்தில் சாந்தனுக்கோ, சாந்தனது குடும்பத்திற்கோ ஒரு துளி அளவேனும் உதவவோ அலோசனை வழங்கவோ தீவிர தமிழ்த் தேசிய தரப்புக்கள் முன்வரவில்லை என்பதையும் தமிழ்த் தேசிய அவதானிப்புமையம் அழுத்தமாக பதிவு செய்கின்றது.
இவ்வாறு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தனை இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டேனும் விடுவிப்பதற்கும், 32 வருடம் சிறைவாசம் அனுபவித்த ஒருவரை அவரது தாயின் முன் நிறுத்த வாய்ப்பு இருந்தும் அதனை தமிழ்ச் சமூகம் தவறிவிட்டடதோடு மட்டுமல்லாது சாந்தனை விடுவிப்பதற்காக குறிப்பிட்டுச் செல்லக்கூடிய அறவழியிலான போராட்டம் எதையும் கூட தாயகத்திலும் புலத்திலும் உள்ள எமது அரசியல் மற்றும் சிவில் ஆளுமைகள் அழுத்தமாக முன்னெடுத்திருக்கவில்லை.
மாறாக சாந்தனது குடும்பத்தினரை விரக்தியடையவே வைத்தது. இதன் மூலம் சாந்தனின் மரணத்திற்கு இந்திய மத்திய மாநில அரசுகள் மாத்திரமின்றி தமிழ்த் தேசிய அரசியல் தரப்புக்களும் ஏன் நாமும் கூட சாந்தனுக்காய் ஒரு அடையாளப் போராட்டத்தைக் கூட நடத்த முடியாதவர்களாகிவிட்டடோம் என்ற குற்ற உணர்வோடு சாந்தனின் புகழுடல் மீது இருகரம் கூப்பி வணக்கம் செலுத்துகின்றோம் என்றுள்ளது.

தாயின் கையால் ஒரு பிடி சாப்பாட்டுக்கு ஏங்கிய சாந்தனுக்கு வாய்க்கரிசி இடும் போது துடிதுடித்த நிமிடங்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விமானங்களில் இருந்து தப்பித்து எதிரிப் பகுதிக்குள் விழும் விமானிகள் ஏன் தாக்கப்படுவதில்லை? News Lankasri
