சங்கு கூட்டணியுடனான கலந்துரையாடல்: சண்முகம் குகதாசன் வெளிப்படை
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் திருகோணமலை மாநகர சபையில் தமக்கு துணை மாநகர முதல்வர் பதவி தரவேண்டும் எனக் கேட்டிருந்ததாக தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் உள்ள மாவட்ட கட்சி பணிமனையில் இன்று(13) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் திருகோணமலை மாநகர சபையில் தமக்கு துணை மாநகர முதல்வர் பதவி தரவேண்டும் எனக் கேட்டிருந்தார்கள். தரலாம் என்று கூறியிருந்தோம்.
செல்வம் அடைக்கலநாதன்
பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் இரண்டு ஆண்டுக்கு தவிசாளர் பதவி தரவேண்டும் எனக் கேட்டிருந்தார்கள். தரலாம் எனத் தெரிவித்திருந்தோம்.
மூதூர் பிரதேச சபையில் இரண்டு ஆண்டுக்கு துணைத் தவிசாளர் பதவி தரவேண்டும் எனக் கேட்டிருந்தார்கள். அதுவும் தரலாம் எனக் கூறியிருந்தோம்.
மேற்படி விடயங்களை இறுதியாக ஜூன் 05ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வைத்து செல்வம் அடைக்கலநாதனிடமும் கூறியிருந்தேன். அவர் என்னை ஜூன் 08ஆம் திகதி திருகோணமலையில் சந்திப்பதாக கூறியிருந்தார்.
எனினும் அவர் சந்திக்கவில்லை. பலமுறை நான் தொலைபேசியில் அழைத்தும் பதில் இல்லை. வேலைப்பளுவாக இருக்கலாம். அழைப்பார் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |