ஷானி அபேசேகர கைது விவகாரம்.. உயர் நீதிமன்றத்தின் தீர்மானம்
குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் இரண்டு முன்னாள் சிஐடி அதிகாரிகள் கைது செய்யப்பட்டமைக்கு எதிரான வழக்கை தொடர்ந்து விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த மூவரும் கடந்த 2021ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமைகள் மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.
சிரேஸ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவினால் ஷானி அபேசேகராவின் சட்டரீதியற்ற கைதுக்கு எதிராக உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் இன்று (08.10.2025) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீமானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஷானி அபேசேகர மற்றும் இரண்டு முன்னாள் சிஐடி அதிகாரிகள், சுகத் மெண்டிஸ் மற்றும் நவரத்தின பிரேமரத்ன ஆகியோருடன் சேர்ந்து, 2021 ஓகஸ்ட் மாதம் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
பொய்யான ஆதாரங்கள்..
முன்னாள் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கில் பொய்யான ஆதாரங்களை உருவாக்கியதாக கூறி மூவரும் கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டனர்.

ஆயுதக் கிடங்கு ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வழக்கு தொடரப்பட்டதாகவும் அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டதாகவும் நீதிமன்றம் விசாரித்தது.
கடந்த 2013 மே 22ஆம் திகதி அன்று முகமது ஷியாம் கொலை தொடர்பான விசாரணையின் போது அப்போதைய பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் உதவியாளர்கள் அளித்த வாக்குமூலங்களைத் தொடர்ந்து இந்த ஆயுதக் கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணை நடவடிக்கை
நீதிபதிகள் மகிந்த சமயவர்தன, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய அமர்வு, மூன்று மனுக்களையும் தொடர அனுமதி அளித்து, மே 14, 2026 அன்று வழக்கை வாதத்திற்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில், மனுதாரர்கள் சார்பாக சட்டத்தரணி சாந்த ஜெயவர்தன, ஷெஹான் டி சில்வா மற்றும் ஹஃபீல் பாரிஸ் ஆகியோர் விசாரணைக்கு முன்னிலையாகினர்.
மேலும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் நெவில் டி சில்வா ஆகியோருக்காக சட்டத்தரணி சஞ்சீவ விஜேவிக்ரமவும், சட்டமா அதிபருக்காக அரசு சட்டத்தரணி சஜித் பண்டாரவும் முன்னிலையாகியிருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan