பெண்களின் வாழ்வாதார நிதியை மோசடி செய்த அநுர தரப்பின் வன்னி எம்பி .. சாணக்கியன் கேள்வி!
வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக இருக்கிற ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஜனாதிபதி பொறுப்புக் கூறுவாரா என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வவுனியா, புளியங்குளத்தில் இன்று (27.04.2025) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், :வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் ஓரணியாக நின்றால் மாத்திரமே எமக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு இந்த நாட்டிலே வரும் என்ற நம்பிக்கையில் வாழ முடியும். இல்லை என்றால் பலமிழந்த ஒரு சமூகமாகவே நாங்கள் தொடர்ந்தும் இருப்போம். தமிழரின் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக தமிழரசுக்கட்சி மாத்திரே இன்று நேர்மையாக செயற்ப்பட்டு வருகின்ற ஒரு கட்சி.
அதற்கு பல உதாரணங்களை கூறலாம். எங்கள் பிரச்சினைகள் பற்றி சர்வதேச சமூகத்திடம் நாங்கள் மாத்திரமே குரல் கொடுக்கிறோம். அண்மையில் வருகை தந்த பாரத பிரதமரை நாம் சந்தித்தோம்.
அவரை சந்திப்பதற்கு எமது கட்சியை சேர்ந்தவர்களும், ஏனைய தமிழ்த் தேசிய பிரதிநிதிகளையும் மக்கள் நாடாளுமன்றம் அனுப்பாவிட்டால் அவரை சந்திக்கும் அரசின் குழுவில் சிங்களவர்கள் மாத்திரமே அங்கம் வகித்திருந்தார்கள்.
ஜனாதிபதியின் மாங்குளம் விஜயம்
அவர்கள் அந்த ரவுடி அமைச்சரையாவது கொண்டு போயிருக்கலாம். அண்மையில் முல்லைத்தீவில் கடற்றொழில் சங்கத் தலைவர் மீது ரவுடி அமைச்சரின் கும்பல் பலமான தாக்குதலை செய்திருக்கின்றது.
அவரது அடாவடித்தனத்தை காட்டியும் வன்னி மண்ணில் அடிவாங்காமல் போயுள்ளார் என்றார் அமைச்சர் என்ற பதவிக்கு அந்த மக்கள் மரியாதை கொடுத்துள்ளனர். இந்த ரவுடி அமைச்சரின் தலைவரான ஜனாதிபதி மாங்குளம் சென்றிருந்தார்.
அங்கு ஒரு தொழிற்பேட்டை வலயம் ஒன்றை அமைப்பதாக சொல்லியிருக்கிறார். ஆனால் நாடாளுமன்றில் வரவு - செலவு திட்ட விவாதத்தில் மாங்குளம் என்ற வார்த்தையே வரவில்லை.
எனவே தேர்தலுக்காக சொல்லும் பொய் வார்த்தைகளே இவை. சிங்கள மக்களும் ஜனாதிபதி சொல்வது போல ஒரு தாய் பிள்ளைகளாக வாழலாம் என்ற மன நிலையில் இருப்பதாக நான் நம்பவில்லை.
இனவாதிகளான கோட்டாபய அரசாங்கம் தங்களுடைய இனவாத பணியை சரியாக செய்ய தவறியமையாலே இன்று இந்த இனவாதிகளுக்கு அந்த மக்கள் வாக்களித்துள்ளனர். கோட்டாவை விட மோசமான இனவாதிகள் இவர்கள்.
சிங்கள பேரினவாத நாடாக தொடர்ந்து இலங்கையை வைத்திருப்பதே அவர்களது எண்ணம். அதற்கு தடையாக இருப்பவர்கள் இலங்கை தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர்களே. இதனை மக்கள் மனதிலே வைத்திருக்க வேண்டும்.
ஊழல்வாதிகள்
எதிர்வரும் தேர்தலில் அதனை வெளிப்படுத்த வேண்டும். மக்களின் ஆதரவு எமது கைகளுக்கு வந்தால் மாத்திரமே நாங்கள் செய்யும் போராட்டம் வலுவானதாக இருக்கும். ஊழல்வாதிகள் இல்லாத அரசு என்றார்கள். வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது.
அவர்கள் அரச ஊழியர்களாக இருந்த போது பெண்களுக்கான வாழ்வாதாரத் திட்டத்திற்காக வந்த நிதியை மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்கள் இருக்கின்ற. விசாரணை செய்யப்பட்டுள்ளது.
இது போல பல விடயங்களை நான் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளேன். ரவுடியாக செயற்படும் அமைச்சர்கள் உள்ளனர். எனவே ஜனாதிபதி இதற்கெல்லாம் பொறுப்புக்கூறா விட்டால் இந்த தேர்தலில் இந்த அரசு தோல்வியடைவதை எவராலும் மாற்ற முடியாது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |