சீஷெல்ஸ் கடலில் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வரும் இலங்கைக் கப்பல்களை அழிக்க பரிசீலனை
எதிர்காலத்தில் சீஷெல்ஸ் கடலில் சட்டவிரோதமாக மீன்பிடிக்கச் செல்லும் இலங்கைக் கப்பல்களை அழித்து விடுவது தொடர்பில் பரிசீலித்து வருவதாக சீசெல்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயத்தை சீஷெல்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீஷெல்ஸ் மீன்பிடி ஆணையத்தின் கட்டுப்பாட்டு மேலாளர் ஜோனி லூயிஸ் இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ளார்.
இலங்கையில் அல்லது இலங்கை ஊழியர்களுடன் பதிவு செய்யப்பட்ட ஆறு மீன்பிடிக் கப்பல்கள் கடந்த ஆண்டு சீஷெல்ஸ் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட ஆறு கப்பல்களில், இரண்டின் மீது ஏற்கனவே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஒருவர் வழக்குத் தொடர போதுமான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார், மேலும் மூன்று வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன.
விசாரணை நடந்து கொண்டிருக்கிறது, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தடுப்பில் உள்ளனர் என்று லூயிஸ் கூறியுள்ளார்.
சர்வதேச மற்றும் உள்ளூர் மீனவர்கள் பல்வேறு நிறுவனங்கள் சேகரித்த தகவல்களின் அடிப்படையில், சீஷெல்ஸ் கடலில் அதிகமான கப்பல்கள் சட்டவிரோதமாக மீன்பிடிக்கின்றன என்று அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில், அண்மையில் தாம் இலங்கை உயர் ஸ்தானிகருக்கு தகவல் கொடுத்துள்ளதாக லூயிஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கக்கூடும் என்றும், இலங்கையின் சட்டவிரோத படகுகளை அழிப்பது குறித்து தமது நாட்டில் பரிசீலிக்கப்படுகிறது என்ற செய்தியை அவருக்கு கூறியதாகவும் சீஷெல்ஸ் மீன்பிடி ஆணையத்தின் கட்டுப்பாட்டு மேலாளர் ஜோனி லூயிஸ் தெரிவித்துள்ளார்.