ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்கியது செனகல் நாடாளுமன்றம்!
செனகல் நாட்டின் நாடாளுமன்றம் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகளுக்கான தண்டனையை இருமடங்காக உயர்த்தும் புதிய சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தின்படி, ஓரினச்சேர்க்கை செயல்களில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் அதிகபட்ச சிறைத்தண்டனை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓரினச்சேர்க்கையை "ஊக்குவிப்பது" (Promotion) என்பது இனி தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என்றும், இதற்காக சுமார் 1.3 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகளை மீறுவதாக குற்றச்சாட்டு
ஜனாதிபதி பாசிரு தியோமாயே ஃபாயே மற்றும் பிரதமர் உஸ்மான் சோன்கோ ஆகியோரின் தேர்தல் வாக்குறுதியான இந்த சட்டத்திருத்தத்திற்கு, நாடாளுமன்றத்தில் 135 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இருப்பினும், இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், இந்த சட்டம் மனித உரிமைகளை மீறுவதாகவும், பாகுபாட்டை அதிகரிப்பதாகவும் கூறி கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், இத்தகைய கடுமையான சட்டங்களால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற அஞ்சி மறைந்து வாழ நேரிடும் என்றும், இது கடந்த 30 ஆண்டுகளாக செனகல் மேற்கொண்ட சுகாதார முன்னேற்றங்களைப் பாதிக்கும் என்றும் எச்.ஐ.வி (HIV) தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
செனகல் ஒரு முஸ்லிம் பெரும்பான்மை நாடு என்பதால், தங்களின் கலாசாரம் மற்றும் மத விழுமியங்களைப் பாதுகாக்கவே இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் விளக்கம் கொடுத்துள்ளது.