பாலஸ்தீனத்திற்கு இலங்கையர்களை அனுப்புவது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்
இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீன இடங்களுக்கு, தொழிலாளர்களை அனுப்புவதை, இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.
சுதந்திர பாலஸ்தீன நாடு என்ற நிலைப்பாட்டை இலங்கை தொடர்ந்த கடைப்பிடித்து வருவதாகவும், பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் விரோதப் போக்கை இலங்கை ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதை இலங்கை நிறுத்த வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் கோரிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேலின் கட்டுப்பாடு
அதேவேளை, ஹக்கீம் பல அரசாங்கங்களில் அமைச்சராக இருந்துள்ளார், ஆனால் இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதை நிறுத்த, அவர் எதுவும் செய்யவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேலுடனான பொருளாதார உறவுகளை இலங்கை திடீரென நிறுத்த முடியாது என்றும், பல நாடுகளைப் போல இஸ்ரேலுடனான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை இலங்கை தொடரும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுடனான உறவுகளை இலங்கை திடீரென நிறுத்தினால், அது பொருளாதாரத்தை பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், இலங்கை, பாலஸ்தீனத்துக்கு முழுமை ஆதரவை வழங்கும்.
ஆனால் இராஜதந்திர மற்றும் பொருளாதார நோக்கங்களுக்காக இஸ்ரேலுடன் உறவுகளைத் தொடரும் பொதுவில், சவூதி அரேபியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளைப் போலவே இலங்கையும் செயற்படும்," என்று பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |