மாகாணசபை முறைமையும் அதிகாரப்பகிர்வும் எனும் தொனிப்பொருளில் மன்னாரில் கருத்தமர்வு
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஏற்பாடு செய்த மாகாணசபை முறைமையும், அதிகாரப்பகிர்வும் எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு நேற்று காலை 10 மணி முதல் 2.30 மணி வரை மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ரி.லுஸ்ரின் தற்குரூஸ் தலைமையில் குறித்த கருத்தமர்வு இடம்பெற்றது.
உரை
இதன்போது 'மாகாணத்திற்கு பகிரப்பட்ட அதிகாரங்கள்' கல்வி ஓர் சிறப்பு பார்வை எனும் கருப்பொருளில் வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன், 'நிலையான தீர்வை எட்டுவதற்கான படிக்கல்லாக மாகாண சபை' எனும் கருப்பொருளில் யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கோசலை மதன், 'மாகாண சபையும், வரலாற்று தருணங்களும்' எனும் கருப்பொருளில் எழுத்தாளர் கருணாகரன் மற்றும் 'உள்ளுராட்சிகள் மீதான மாகாண சபையின் அதிகாரங்களும்,வரையறைகளும்' எனும் கருப்பொருளில் சட்டத்தரணி சவிரியப்பு டலிமா சந்திரபோஸ் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
குறித்த கருத்தமர்வின் தொகுப்புரையை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வழங்கினார்.
உரிய பதில்
அதனை தொடர்ந்து கருத்தமர்வில் கலந்து கொண்டவர்கள் குறித்த கருத்தாளர்களின் கருத்துக்களில் ஏற்பட்ட சந்தேகங்களை கேள்விகளாக முன் வைத்த நிலையில் உரிய பதில் வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அங்கத்துவ கட்சி பிரதிநிதிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.







