இலங்கைக்கு கடத்த தயார் செய்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்தப்படுவதற்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த 2.6 தொன் மஞ்சள் இன்று புதன்கிழமை அதிகாலையில் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி -சிப்பிகுளம் கடல் கரையில் இருந்து இந்த மஞ்சள் தொகை பறிமுதல் செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
87 பைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சள், மீன்பிடி படகு ஒன்றின் மூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருந்தது.
குறித்த கிராமத்திலிருந்து மஞ்சள் கடத்தப்படவுள்ளதாக ‘கியூ’ காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து காவல்துறைக் குழு ஒன்று அதிகாலை 1.30 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் நடமாடிய மூன்று இளைஞர்களைக் கண்டறிந்து அவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றது.
இந்த மூன்று பேரும் குலத்தூரைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து 2,610 கிலோ மஞ்சள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மூன்று கைத்தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஏற்கனவே தூத்துக்குடியில் இருந்து 2021, ஜூன் 30 ம் திகதி இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2.5 தொன் மஞ்சளை பொலிசார் பறிமுதல் செய்தமை குறிப்பிடத்தக்கது.