வவுனியாவில் கோழி விற்பனையில் ஈடுபட்டவரின் அனுமதிப்பத்திரம் பறிமுதல்
வவுனியா, குட்செட் வீதியில் ஆலயம் முன்பாக வாகனத்தை நிறுத்தி வைத்து கோழி விற்பனையில் ஈடுபட்டவரின் பயணத்தடைக்கால அனுமதிப் பத்திரம் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இன்று (12.06) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பயணத்தடைக் காலப்பகுதியில் மக்களின் வீடுகளுக்குச் சென்று கோழி இறைச்சி விற்பனை செய்வதாகப் பிரதேச செயலகம் ஊடாக பெறப்பட்ட அனுமதியை வைத்து வவுனியா, குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்திற்கு அருகில் வாகனத்தை நிறுத்தி வைத்து கோழி விற்பனை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் சுகாதார நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து அங்கு சென்ற பொலிஸார் பயணத்தடை காலத்தில் மக்களின் வீடுகளுக்குச் சென்று கோழி விற்பனைக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திரத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில்
சுகாதாரப் பிரிவினரின் கவனத்திற்கும் கொண்டு சென்றதுடன், அவர்களுக்கு எதிராக
முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்காகச் சுகாதாரப்பிரிவுக்கு
அழைக்கப்பட்டுள்ளனர்.




