இலங்கை படகுகளில் இருந்து போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல்
இந்திய லட்சத்தீவுகளுக்கு அருகே மூன்று இலங்கை மீன்பிடி படகுகளை கைப்பற்றிய இந்திய கடலோர காவல்படையினர், படகுகளில் இருந்து ஏராளமான போதைப்பொருட்களை பறிமுதல் செய்ததாக “இந்தியன் எக்ஸ்பிரஸ்” செய்தி வெளியிட்டுள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, படகுகளில் இருந்து ஹெரோயின், ஒரு ஏ.கே 47 துப்பாக்கி மற்றும் துப்பாக்கி ரவைகள் 1,000 என்பன கடலோர காவல்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்திய கடற்படையின் கூற்றுப்படி, கடற்படையின் ஒரு டோர்னியர் வானூர்தி கடந்த எட்டு நாட்களாக அரேபியா கடலில் பயணித்த ஏழு இலங்கை படகுகளை கண்காணித்து வந்தது.
இதனையடுத்து குறித்த வானூர்தி, தென் கடற்படை கட்டளை மற்றும் இந்திய கடற்படையின் கடலோர காவல்படையுடன் ஒருங்கிணைந்து படகுகளை தடுத்து நிறுத்த விரைவான நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்தநிலையில் நேற்று பிற்பகல் படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டன.
இதனையடுத்து கடலோர காவல்படையினர் மூன்று இலங்கை படகுகளை தடுத்து அதிலிருந்த 12 பேரை தடுத்து வைத்துள்ளனர்.
