இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.17 லட்சம் பீடி இலைகளை பொலிஸார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சமீப காலமாக மஞ்சள், பீடி இலை, களைக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.
இதனை அவ்வப்போது கியூ பிரிவு பொலிஸார், கடலோர பாதுகாப்பு பொலிஸார் மடக்கி பிடித்து வருகின்றனர். அதேபோன்று போதை பொருட்கள் கடத்தலும் நடந்து வருகிறது.
இதனால் மாவட்ட மரைன் பொலிஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி தருவைகுளம் அருகே உள்ள கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலை கடத்தப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி மற்றும் பொலிஸார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, பொலிசை பார்த்ததும் கடற்கரையில் இருந்த ஒரு படகு வேகமாக கடலுக்குள் புறப்பட்டு சென்றது.
சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
இதைத் தொடர்ந்து பொலிஸார் மீனவர்களின் உதவியுடன், மற்றொரு படகில், கடலுக்குள் சென்ற படகை விரட்டி சென்றனர். அப்போது அந்த படகில் இருந்தவர்கள், மறைத்து வைத்து இருந்த மூட்டைகளை தூக்கி கடலில் வீசினர். பின்னர் அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றுள்ளனர்.
கடலில் மிதந்து வந்த மூட்டைகளை பொலிஸார் சேகரித்தனர்.மொத்தம் 38 மூட்டைகள் இருந்தன. அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, ஒவ்வொரு மூட்டையிலும் சுமார் 45 கிலோ எடை கொண்ட பீடி இலைகள் இருந்தன. மொத்தம் 1,700 கிலோ பீடி இலைகள் இருந்தன.
இதன் இலங்கை மதிப்பு சுமார் ரூ.17 இலட்சம் என்று கூறப்படுகிறது. மேலும் கியூ பிரிவு பொலிஸார், பீடி இலை மூட்டைகளை கடலில் வீசிவிட்டு தப்பிச் சென்ற கும்பல் குறித்து விசாரித்து, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.