தன் மீதான குற்றச்சாட்டு குறித்து உடனடியாக விசாரணையை கோரும் றிசார்ட் பதியூதீன்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் தன்னை பற்றி முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைக்கு அமைய உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் றிசார்ட் பதியூதீன் நேற்று இலஞ்ச ஆணைக்குழுவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றிசார்ட் பதியூதீன்,
நான் அமைச்சராக இருந்த போது, எனது அமைச்சின் கீழ் கைத்தொழில் அபிவிருத்திச் சபை இருந்தது. அந்த நிறுவனம் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருட்களை வழங்கி இருந்தது. அந்த 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் ஒன்று கோலோசஸ் பிரைவட் லிமிட்டட்.
ஒரு குண்டுதாரியே அதன் உரிமையாளராக இருந்தார். இது சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை நடத்துமாறும், அந்த விசாரணைகளை இலஞ்ச ஆணைக்குழுவிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு மாத்திரமே என் மீது சுமத்தப்பட்டுள்ளது. இதனால், உடனடியாக விசாரணை நடத்துமாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன். விசாரணை நடத்தும் போது உண்மை தெரியவரும் என நான் எதிர்பார்க்கின்றேன் எனவும் பதியூதீன் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து கொண்டுள்ள நிலைப்பாடு தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள பதியூதீன், “சில விடயங்கள் தொடர்பாக இணங்க முடியாது. எனினும் 90 வீதம் இணங்க கூடிய விடயங்கள் இருக்கின்றன” என கூறியுள்ளார்.