இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள பல துறைமுகப்பகுதிகளில் பாதுகாப்பு தீவிரம்
இந்தியாவின் கேரளா மாநில, எர்ணாகுளம் மற்றும் ஆலப்புழாவில் ஆகிய இடங்களில் உள்ள துறைமுகப் பகுதியிலிருந்து, பாகிஸ்தானுக்கு சில இலங்கைப் பிரஜைகள் பயணிக்கவுள்ளதாக வெளியான தகவலை அடுத்து அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியக் கரையோர காவல்துறைக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்தே கடந்த 72 மணிநேரமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்குச் செல்வதற்காக எர்ணாகுளம் மற்றும் ஆலப்புழா கடலோரப் பகுதிக்கு சுமார் 13 இலங்கைப் பிரஜைகள் வருவார்கள் என்று ஒரு புலனாய்வு எச்சரிக்கை கடந்த சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டது.
இதனையடுத்து, கடலோரப் பகுதியிலிருந்து வெளிநாட்டினரின் நடமாட்டத்தைத் தடுக்க காவல்துறையினர் தயார் நிலையில் இருப்பதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
இலங்கை பிரஜைகள், சிலர் பிரதேசத்தில் இருப்பது பற்றி மீனவர் சமூகத்தின் மூலம் உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இந்தநிலையில், கரையோரத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் மற்றும் கட்டிடங்கள் கண்காணிக்கப்படுகின்றன. இதனைத் தவிர, கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்.
மீன்பிடி படகுகளில் திரும்பும் மீனவர்கள் பற்றிய தகவல்களையும் சேகரிக்கப்படுகின்றன. கடற்கரையில் ரோந்து நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்று கொச்சி கடலோர காவல்துறை ஆய்வாளர் சங்கீத் ஜாப் கூறியுள்ளார்.
பல மீனவ படகு தொழிலாளர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இலங்கை பிரஜைகளை அடையாளம் காண்பது எளிதான காரியமாக இருக்காது.
அதேபோன்று தமிழகத்திலிருந்து பல படகுகள் மாவட்டத்தில் உள்ள துறைமுகங்களில் நிறுத்தப்படுகின்றன.
இந்தநிலையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக எர்ணாகுளம் காவல்துறைத் தலைவர் கே.கார்த்திக் தெரிவித்துள்ளார்.