பங்களாதேஸ் நாடாளுமன்றத்தில் நுழைய முயற்சித்த போராட்டக்காரர்கள்! நீடிக்கும் பதட்டம்
பங்களாதேஸில் போராட்டம் வெடித்து வரும் நிலையில் போராட்டக்காரர்கள் அந்தநாட்டு நாடாளுமன்றத்தில் நுழைய முயற்சித்ததால் அங்கு பதட்டம் நீடிக்கின்றது.
அதனால் அங்கு இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
நீடிக்கும் பதட்டம்
பங்களாதேஸில் மர்ம நபர்களால் சமீபத்தில் சுடப்பட்ட மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 18ஆம் திகதி உயிரிழந்ததை தொடர்ந்து பயங்கர கலவரம் வெடித்தது.
இதை பயன்படுத்தி, ஹிந்து இளைஞரை ஒரு கும்பல் கொடூரமான முறையில் அடித்து கொன்று, அவர் உடலை சாலையில் போட்டு தீவைத்து எரித்தது.

பத்திரிகை அலுவலகங்களுக்கு தீ வைத்ததுடன், டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியது.
இதனால், பங்களாதேஸமே கலவர பூமியாக காட்சியளித்து வருகிறது.
அதேபோல் முன்னாள் அமைச்சர் மொஹிபுல் ஹசன் சவுதுரி நவுபலின் இல்லம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள்
பொலிஸார் மற்றும் துணை ராணுவத்தினர் நாடாளுமன்ற வளாகம் உட்பட டாக்காவின் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டனர். இதனால், பல இடங்களில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
பல பகுதிகள் இன்னும் பதட்டமாகவே உள்ளன. இதனிடையே, கொல்லப்பட்ட ஹாதியின் உடலுக்கு பலத்த பாதுகாப்புடன் இன்று(2025.12.20) இறுதி மரியாதை நடந்தது.

இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகம் முன்பு குவிந்து வரும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், உள்ளே நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணுவம் மற்றும் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.