இரண்டாம் கட்ட போராட்டம் ஆரம்பமாகியுள்ளது - அரசுக்கு எச்சரிக்கை
மக்கள் போராட்டத்தின் இரண்டாம் கட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் மேலும் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
இன்று பிணை வழங்கப்பட்டதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு நாட்டை ஆள அதிகாரம் இல்லை
மக்கள் போராட்டத்தின் இரண்டாம் கட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்வரும் நாட்களில் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு நாட்டை ஆள அதிகாரம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் மருதானையில் கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவில் குணசேகரவும் அடங்குவர். நேற்று கைது செய்யப்பட்ட 83 ஆர்ப்பாட்டக்காரர்களில் 80 பேர் பொலிஸ் பிணையிலும் 3 பேர் நீதிமன்றத்தால் பிணையிலும் விடுவிக்கப்பட்டதாக சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
மருதானையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
சோசலிச இளைஞர் சங்கம் தலைமையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.