சிறுமி ஹிசாலினியின் மரணத்தில் தொடரும் மர்மம்! ரிசாட் வீட்டின் அறைகளுக்கு சீல் வைப்பு
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிய நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணித்த ஹிசாலினியின் மரணம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் வீட்டின் சில அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரிஷாட் பதியூதினின் வீட்டிற்கு பணிக்காக அழைத்து வரப்பட்ட மலையக பெண்கள் 11 பேர் கடுமையான தொடர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக புலனாய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீக்காயங்களுடன் உயிரிழந்த டயகம பகுதியினை சேர்ந்த 16 வயது சிறுமி ஹிசாலினியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்து சிறுமியின் தாயாரால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில்,சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவத்தில் தொடர்ந்தும் மர்மம் நீடித்து வரும் நிலையில்,சிறுமிக்கு நீதிக்கோரி பல பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்து.
இதனை தொடர்ந்து , சிறுமியின் சடலம் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக நேற்றைய தினம் தோண்டியெடுக்கப்பட்டிருந்ததுடன், சரீரத்துக்கான 2 ஆம் கட்ட பிரேத பரிசோதனை இன்று சுமார் 9 மணித்தியாலம் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சடலம் மீதான பரிசீலனைகள் அனைத்தும் நிறைவடைந்து இறுதி அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில், சிறுமியின் சரீரம் பேராதனை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.