நயினாதீவில் பாடசாலை அதிபர் நீரில் மூழ்கி மரணம்
யாழ்ப்பாணம் நயினாதீவு பகுதியில் இன்று(28) இடம்பெற்ற துயரமான படகு விபத்தில், நயினாதீவு ஸ்ரீ கணேசா கனிஷ்ட மகா வித்தியாலய அதிபர் நடராசா மயூரன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இன்று (28.05.2026) மாலை நயினாதீவிலிருந்து யாழ்நகர் நோக்கி நண்பர்களுடன் இயந்திரப் படகில் குறிகட்டுவான் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, படகு கவிழ்ந்ததாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீரில் மூழ்கி மரணம்
இந்த விபத்தில் நீரில் மூழ்கிய 48 வயதுடைய அதிபர் நடராசா மயூரன் அகால மரணம் அடைந்துள்ளார், இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

அவர் அண்மையில் புங்குடுதீவிலிருந்து நயினாதீவு ஸ்ரீ கணேசா கனிஷ்ட மகா வித்தியாலயத்தின் அதிபராக பொறுப்பேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கல்விப் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்த அவரின் திடீர் மறைவு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த அதிபரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், மாணவர்களுக்கும் மற்றும் சக ஆசிரியர்களுக்கும் பலரும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு தற்போது நயினாதீவு பிரதேச வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.