சுகாதார துறையை அழியாது காப்பாற்றுங்கள் - ஜனாதிபதியிடம் கோரும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்
சுகாதார அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்கவை நீக்கி விட்டு, அந்த பதவிக்கு முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளரும் விசேட மருத்துவ நிபுணருமான அனில் ஜாசிங்கவை நியமிக்குமாறு தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய ஆதரவாளரான முருத்தெட்டுவே ஆனந்த தேரர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார துறை தற்பொழுது இல்லை. எவரும் வேலை செய்வதில்லை. வெறுத்து போய் இருக்கின்றோம்.சஞ்ஜீவ முனசிங்க திறமையான மருத்துவர், அந்த திறமையான மருத்துவருக்கு பொருத்தமான இடத்தை வழங்கி, சுகாதார அமைச்சின் செயலாளராக வேறு ஒருவரை நியமித்து, அதனை அழியாது முன்னெடுத்து செல்லுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தற்போது மரக் கன்றுகளை நடுகிறார். அவர் மருத்துவத்துறையில் விசேட மருத்துவ நிபுணர் என்பதுடன் துறைசார்ந்த நிர்வாகத்தை அறிந்தவர். இப்படியானவரை மரக் கன்றுகளை நட பயன்படுத்தினால், அவரது பயிற்சியும், மனித வளமும் வீணடிக்கப்படும்.
ஜனாதிபதிக்கு யார் ஆலோசனை வழங்கினார்களோ தெரியவில்லை. ஜனாதிபதி அவர்களே, மரக் கன்றுகளை நடுவதை கைவிட சொல்லி, கொரோனா செடிகளை அகற்ற அனில் ஜாசிங்கவடம் ஆலோசனை பெறுங்கள் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பட்டுள்ளார்.