சட்டமா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள ரிஷாத் தொடர்பான விடயங்கள் - சரத் வீரசேகர
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை கைது செய்ய எந்த திட்டமும் இல்லை என்று பொது பாதுகாப்பு துறை அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கியதாரி பற்றிய தகவல்கள் தெரிந்தால் அதை குற்றப்புலனாய்வு துறைக்கு வழங்க பெர்னாண்டோவுக்கு கடமை உள்ளது என்று அவர் இன்று நாடாளுமன்றில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கியதாரி பற்றி தனக்குத் தெரியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னாண்டோ கூறியிருந்தார்.
எனவே தேசிய பாதுகாப்புக்காக குற்றப்புலனாய்வுத்துறையினருக்கு தகவல்களை வழங்க அவருக்கு உரிமை உண்டு.
அவர் அவ்வாறு செய்ய விரும்பவில்லை என்றால், தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
ரிஷாத் பதியுதீன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் கைது செய்யப்படவில்லை.
ஆனால் அவர் பல சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பதால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ரிஷாத் பதியுதீன் தொடர்பான விஷயங்களை சட்டமா அதிபரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.