சங்கீத் விஜேசூரியவின் கூற்று அப்பட்டமான பொய்! அம்பலப்படுத்திய சர்வதேச நாணய நிதியம்
இலங்கைக்கு உதவி வழங்குவது தொடர்பில் எந்தவொரு தரப்புக்கும் எதுவித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கொழும்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரபல பாடகர் சங்கீத் விஜேசூரிய, அண்மையில் இணையத்தள ஊடகமொன்றில் தெரிவித்த கருத்து தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் கொழும்பு அலுவலக செய்தித் தொடர்பாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம்
அண்மையில் ஒரு இணையத்தள கலந்துரையாடலில் பங்கேற்ற சங்கீத் விஜேசூரிய, தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு, தனது நண்பரொருவரும், மற்றொரு குழுவும் இலங்கைக்கு 23 மில்லியன் டொலர் அன்பளிப்பாக வழங்கத் தயாராக இருந்ததாகக் கூறினார்.
எனினும், சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போதுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக அவ்வாறான ஒரு பெரும் தொகைப் பணத்தை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்குவதில் ஒரு சட்டரீதியான தடை இருப்பதாகவும், இலங்கை தற்போது அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் நடந்து வருவதால், அத்தகைய பணத்தைக் கொண்டு வருவது சாத்தியமில்லை என்றும் சங்கீத் விஜேசூரிய சுட்டிக்காட்டியிருந்தார்.

இது தொடர்பில் ஊடகங்களின் கேள்விக்குப் பதிலளித்த சர்வதேச நாணய நிதியத்தின் கொழும்பு அலுவலக செய்தித் தொடர்பாளர், கடன்களைப் பெறும்போது பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டாலும், உதவி அல்லது முதலீட்டைப் பெறுவதற்கு அந்த அமைப்பு நாட்டின் மீது அத்தகைய நிபந்தனைகளை விதிக்கவில்லை என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் தீவிர ஆதரவாளரான சங்கீத் விஜேசூரியவின் கூற்றில் எதுவித உண்மையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.