ஆவணங்களை சமர்ப்பிக்க தயாராகும் சாணக்கியன்! பிள்ளையானுக்கு பதிலடி (Video)
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் பிள்ளையான் என அழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பதிலடி வழங்கியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார்.
சந்திரகாந்தன் முன்வைத்த குற்றச்சாட்டு
இதன்போது சாணக்கியன் கூறுகையில், நாடாளுமன்றத்தில் நான் இல்லாதபோது என்னைப்பற்றி அவதூறு பேசி பல்வேறு குற்றச்சாட்டுகளையும் சக நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் முன்வைத்திருந்தார்.
அந்தக் குற்றச்சாட்டுகளை நான் முற்றாக மறுக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் மட்டக்களப்பில் இடம்பெறும் காணி சுவீகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளார்.
முன்வைக்கப்படவுள்ள ஆவணங்கள்
இதேவேளை தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தாம் ஆவணங்களுடன் பதிலளிப்பதாக கூறியுள்ளார்.
மேலும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆவணங்களையும் சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“எனக்கு என்னுடைய தாயும் தந்தையும் வைத்த பெயர் சாணக்கியன் இராகுல் இராஜபுத்திரன் ராசமாணிக்கம். அதுபற்றி அவருக்கு ஏதேனும் குழப்பம் இருந்தால் அவர் அதனைபற்றி பேசலாம்.
இரண்டாவதாக காணி அபகரிப்பு பற்றி ஒருவிடயம் சொல்லியிருந்தார் என்னுடைய பெயரினை பயன்படுத்தி. காணி அபகரிப்பினை பற்றி ஏதேனும் இருந்தால் நான் ஜனாதிபதியிடம் கேட்கின்றேன். குழு ஒன்றினை நியமித்து நான் என்னிடமுள்ள ஆவணங்களை கையளிக்கின்றேன். அதனை ஆராயுங்கள். அதேபோன்று சிவநேசதுரை சந்திரகாந்தனுடைய ஆவணங்களையும் தருகின்றேன் அதனையும் நீங்கள் விசாரியுங்கள்.
மூன்றாவதாக நான் கனடாவிற்கு ஆட்கடத்தலில் ஈடுபடுவதாக குறிப்பிட்டிருந்தார்.
கனடாவிற்கு விசா எடுத்து எப்படி போவது என்று தெரியாது என்பதனை அவர்
நிருபித்துள்ளார். கனடாவிற்கு ஆட்களை கடத்தி காசு உழைக்க வேண்டிய அவசியம்
எனக்கு இல்லை.
ஆனால் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சகோதரர் என அழைக்கப்படும் அகிலகுமார்
சந்திரகாந்தன் அவுஸ்ரேலியாவிற்கு ஆட்களை கடத்துவதாக சர்வதேச ஊடங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.