ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள தகவல்
ஐக்கிய மக்கள் சக்திக்கும் அதற்கு ஆதரவு வழங்கும் கட்சிகளுக்கும் இடையிலும் முரண்பாடுகள் மற்றும் நெருக்கடிகள் எதுவுமில்லை என அக்கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் இன்று (07) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது எமது கட்சிக்கும் அதற்கு ஆதவு வழங்கும் கட்சிகளுக்கும் இடையிலும் முரண்பாடுகள் மற்றும் நெருக்கடிகள் ஏற்ப்பட்டுள்ளதாக சமூக ஊடக வலையமைப்புகளில் வெளியிடப்பட்ட அடிப்படையற்ற போலியான செய்திகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தனது கவனத்தை ஈர்த்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இத்தகைய போலியான ஊடக பிரச்சாரத்தை கடுமையாக கண்டனம் செய்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால வெற்றிகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மீது முழு நம்பிக்கையையும் தெரிவித்து இன்று பிரேரனை ஒன்றை ஏகமனதாக நிறைவேற்றினர்.
மக்களால் நிராகரிக்கப்படும் அரசாங்கத்தையும் நிராகரிக்கப்டும் அரசாங்கத்தை பாதுகாக்க முயற்சிக்கும் டீல் அரசியல்வாதிகள் இதற்குப் பின்னால் இருப்பதாகவும், இந்த சதியைத் தோற்கடிக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு உறுதியளித்தது.
எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கிம், பாட்டாலி சம்பிக ரணவக்க, மனோ கணேசன் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்தப் பிரேரனையை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரஞ்சித் மத்தும பன்டார, ராஜித சேனாரத்ன,அசோக அபேசிங்க ஆகியோர் ஆமோதித்ததோடு அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக இதை ஏற்றுக்கொண்டனர்.