சரத் வீரசேகரவின் காவல்துறை வேண்டாம்! இலங்கையின் காவல்துறையே வேண்டும். எதிர்கட்சியின் குரல்
கொழும்பு பொரள்ளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்டமை தொடர்பான விசாரணையில், கத்தோலிக்க மக்களின் மதகுருவான கர்தினால் மல்கம் ரஞ்சித்துக்கு திருப்தி ஏற்படும்போதே தாமும் விசாரணை குறித்து திருப்திப்படமுடியும் என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
குறித்த தேவாலயத்துக்கு சென்று நிலைமைகளை அவதானித்த அவர், எதிர்கட்சி தலைவர் என்ற அடிப்டையில் பொறுப்புக்கூறும் கடப்பாட்டுடன் தேவாலயத்துக்கு சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் கர்தினால் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இது பாரிய பிரச்சினையாகும் எனவே கத்தோலிக்க மக்களின் நம்பிக்கையை வெல்லக்கூடிய வகையில் காவல்துறையினர் நடந்துக்கொள்ளவேண்டும் என்று அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
சம்பவம் இடம்பெற்ற அன்று காலையில் இருந்து இடம்பெற்ற விடயங்களை கொண்ட சீசீடிவி காட்சிகளை பரீட்சிக்காமல், 3மணிக்கு பின்னர் உள்ள காட்சிகளை காவல்துறையினர் பரீட்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே இந்த விடயத்தில் நம்பிக்கையுடன் செயற்பட வேண்டியது காவல்துறையினரின் பொறுப்பு என்று சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்
இதேவேளை சம்பவம் தொடர்பில் உரியவர்கள் கைது செய்யப்படாது, தேவாலயத்தில் பணியாற்றுபவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்த்தன குறிப்பிட்டார்.
இந்தவிடயத்தில் காவல்துறையினர் சரத் வீரசேகரின் காவல்துறையினர் அல்ல. இலங்கை காவல்துறையினராக செயற்படவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பிரதானமானவர்கள் என்று சரத் வீரசேகர, நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டவர்களில் ஒருவரான அக்பர் என்ற பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் காவிந்த ஜெயவர்த்தன தெரிவித்தார்.