பொதுமக்கள் வீதிக்கு இறங்குவர் - அநுர அரசுக்கு சஜித் அணி கடும் எச்சரிக்கை
"ஊடக சுதந்திரத்தை முடக்கும் வகையில் அநுர அரசு செயற்பட்டால் இந்த அரசுக்கு எதிராக மக்களை வீதிக்கு இறக்குவோம். பொலிஸார் ஒருதலைபட்சமாகவே செயற்படுகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தல்
"நாட்டில் ஜனநாயகம் மற்றும் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசு தற்போது ஊடகங்களுக்கு எதிராகச் செயற்படுகின்றது.

அரசின் முறைகேடான செயற்பாடுகளை ஊடகங்கள் சுட்டிக்காட்டும் போது அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அரசுக்குக் கிடையாது. ஊடக சுதந்திரத்தை முடக்கும் வகையில் அரசு செயற்பட்டால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும்.
பொதுமக்கள் வீதிக்கு இறங்குவர்
அரசுக்கு எதிராக மக்களை வீதிக்கு இறக்குவோம். ஊடகத்துக்கு எதிராகப் பொலிஸார் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கும் நிலைமை இன்று காணப்படுகின்றது.
ஊடகங்கள் முறையற்ற வகையில் செயற்பட்டால் பொலிஸார் ஊடகத்துறை அமைச்சிடம் முறைப்பாடளிக்க வேண்டும். பொலிஸார் அரசின் நோக்கத்துக்கமைய ஒருதலைப்பட்சமாகச் செயற்படுகின்றனர் என்றார்.