ராஜபக்சர்களிடம் மலர்த் தட்டை ஏந்திச்செல்லவில்லை! ரணிலுக்கு சஜித் பதிலடி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு தாம் அனுப்பிய கடிதம், தனிப்பட்ட ரீதியில் அனுப்பிய கடிதம் அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
“எதிர்க்கட்சித் தலைவர்தான், மே 12ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதம் எழுதியதை மறந்துவிட்டார். அந்தக் கடிதத்தில், ஏனைய கட்சிகளுடன் இணைந்து இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க பிரதமர் பதவியை பொறுப்பேற்கத் தயார் என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி எழுதிவிட்டு, ஏன் என்னை இவர்கள் குறைக்கூற வேண்டும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.
இதற்கு இன்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து பதிலளிக்கும் போதே சஜித் பிரேமதாச குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவிற்கு அனுப்பிய கடிதம்

மேலும் கூறுகையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு தாம் அனுப்பிய கடிதம், தாம் தனிப்பட்ட ரீதியில் அனுப்பிய கடிதம் அல்ல. எமது நாடாளுமன்றக்குழுவின் அனைவரும் இணைந்து அனுப்பிய கடிதம்.
அந்த கடிதத்தில் தேர்தல் உட்பட்ட 5 விடயங்கள் தொடர்பில் வலியுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தது. இதனை விடுத்து, எமக்கு பிரதமர் பதவிவேண்டும் என்று ராஜபக்சர்களிடம் மலர்த் தட்டை ஏந்திச்செல்லவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை மாத்திரம் முன்வைத்து ஜனாதிபதி உண்மையான நிலைப்பாடுகளைத் திரிபுபடுத்தியுள்ளார் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தான் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி நிபந்தனைகளுடனையே உரிய கோரிக்கையை முன்வைத்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நிபந்தனையின்றி பட்டம், பதவி, சலுகைகளை ஏற்றுக்கொள்வதற்காகத் தான் ஒருபோதும் செயற்படவில்லை எனத் தெரிவித்த அவர், அவ்வாறான பதவி வெறி தனக்கோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கோ இல்லை எனவும் கூறியுள்ளார்.
ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டமும், வீடுகள் மற்றும் சொத்துக்களுக்குத் தீவைத்த கீழ் தர நடவடிக்கையும் ஒன்றல்ல வேறுபட்டவை எனத் தெரிவித்ததுடன், இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களுக்குத் தான் முற்றிலும் எதிரானவன் எனவும், ஜனநாயகப் போராட்டங்களுக்கு நிபந்தனையின்றி சார்பாக இருக்கின்றார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவுக்குத் தான் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நிபந்தனைகளையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் வெளியிட்டார்.
அவையாவன, 01. குறுகிய காலப்பகுதிக்குள் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதற்கு இணக்கம் தெரிவித்தல்.
02. இரண்டு வார காலத்துக்குள் சகல கட்சிகளினதும் ஒத்துழைப்புடன் அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தைக் கொண்டு வருதல் மற்றும் நடைமுறைப்படுத்தல்.
03. எம்மால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள அரசமைப்பின் 21 ஆவது திருத்தம் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கச் செய்யும் வகையில் அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயதானங்களுக்கமைய மிகக் குறுகிய காலத்துக்குள் சகல கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் நடைமுறைப்படுத்தல்.
04. மக்களுடைய வாழ்க்கை முறையை வழமை நிலைக்குக் கொண்டு வருவதுடன், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்து மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்ட அரசமைப்பு திருத்தங்களை நடைமுறைப்படுத்திய பின்னர் ஸ்தீரமான அரசை ஸ்தாபிப்பதற்கு மக்களுக்கு வாய்ப்பளிக்கக்கூடிய வகையில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துதல்.
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri