சஜித் மற்றும் நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பில் எட்டப்பட்டுள்ள இணக்கம்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் இலங்கை வந்துள்ள நோர்வே நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரியாஸ் கிராவிக் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு நேற்று (03) பிற்பகல் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கான தொலைநோக்கு மூலோபாயங்கள் முன்வைக்கப்பட்டன.
டித்வா சூறாவளிப் பாதிப்பின் போது CERF, WFP மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக நோர்வே வழங்கிய 24 மில்லியன் நோர்வே குரோனர் (NOK) மதிப்பிலான உடனடி மனிதாபிமான உதவிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
அரசு வழங்கி வரும் தொடர் ஒத்துழைப்பு
அத்துடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் நோர்வே அரசு வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் அவர் இதன்போது பாராட்டிப் பேசினார்.
இலங்கையைப் பசுமைத் தொழில்மயமாக்கலுக்கு இட்டுச் செல்வதில் உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்திய சஜித் பிரேமதாஸ, பின்வரும் துறைகளில் நோர்வேயின் நிபுணத்துவத்தைக் கோரினார்:
புதுப்பிக்கத்தக்க சக்தி: மிதக்கும் சூரிய ஆற்றல் நிலையங்கள் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி.
எரிபொருள் மாற்றம்: புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை எட்டுதல்.
கடல்சார் வளங்கள்: மீன்பிடித் துறை, கடல்சார் பாதுகாப்பு மற்றும் நிலையான துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட 'நீலப் பொருளாதார' (Blue Economy) திட்டங்களை விரிவுபடுத்துதல்.
வலியுறுத்தப்பட்ட விடயங்கள்
2028ஆம் ஆண்டுக்கான இறையாண்மைப் பத்திரக் கடன் இலக்குகளை எட்டுவதற்குத் தேவையான நிறுவன ரீதியிலான சீர்திருத்தங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக வரி நவீனமயமாக்கல், உள்நாட்டு வள மேம்பாடு மற்றும் ஊழல் எதிர்ப்பு கட்டமைப்புகளில் நவீன தொழில்நுட்ப ஒத்துழைப்பை அவர் நோர்வேயிடமிருந்து எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
ஜனநாயக ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தைப் பாதுகாப்பதில் தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய சஜித் பிரேமதாஸ, மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் அதன் புவிசார் அரசியல் தாக்கங்கள் குறித்தும் நோர்வே பிரதி அமைச்சருடன் கலந்துரையாடினார்.
இலங்கை மற்றும் நோர்வே ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் இச்சந்திப்பு நிறைவுற்றது.




மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam