பணம் கொடுத்து ஆதரவைப் பெற முயற்சிக்கும் அரசாங்கம்: சஜித் குற்றச்சாட்டு!
எதிர்க்கட்சியின் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் 20 கோடி ரூபாவை வழங்கி பணத்துக்கேனும் தம் பக்கம் பெறுவதற்குப் பேரம் பேசும் முயற்சிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
தெஹிவளையில் நேற்றைய தினம் (01.04.2023) நடைபெற்ற வட்டார கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அரசிடம் செல்வதாக வரும் போலிச் செய்திகளை உருவாக்கி நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியைப் பிளவுபடுத்தும் சதித்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி
நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பணமில்லாத இந்த அரசாங்கத்தின் பக்கம் இணைத்துக்கொள்வதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பணம் கொடுத்து முயற்சித்தாலும், அரசில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் பணமில்லாமல் எதிர்க்கட்சியுடன் இணையத் தயாராக உள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் பணத்துக்காகத் தமது சுயமரியாதையைத் தாரைவார்க்க மாட்டார்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
2020ஆம் ஆண்டு 6 மாத கால வயதான ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு 54 ஆசனங்களை வழங்கி தேர்தல் வரலாற்றில் சாதனை படைக்க இந்நாட்டு மக்கள் உதவினார்கள் என்றும், 20 கோடி ரூபா அல்லது அதற்கு மேல் கொடுத்தாலும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சலுகைகளுக்காகவோ வரப்பிரசாதங்களுக்காகவோ தங்கள் சுயமரியாதையை இழக்க மாட்டார்கள் என்றும், மக்களுக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டார்கள் என்றும் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.
விழிப்புடன் இருக்க வேண்டும்
மக்களுக்கு துரோகம் 20 கோடி ரூபா அல்ல 50 ஆயிரம் கோடியேனும் இரைத்து முடிந்தால் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவரை தன் பக்கம் இணைத்துக்கொள்ளுங்கள் பார்ப்போம் எனத் தான் அரசுக்குச் சவால் விடுக்கின்றார் என்றும் இவ்வாறு மக்களுக்குத் துரோகம் இழைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இணைத்துக் கொள்வதற்குப் பணமாகக் கறுப்புப் பணமும், பண்டோரா பத்திர பணமுமே பயன்படுத்தப்படுகின்றது என்றும், இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாஸ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலதிக செய்தி: ராகேஷ்
முதலாம் இணைப்பு
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சில உறுப்பினர்களுக்குப் பணம் கொடுத்து, தமக்கான ஆதரவைப் பெற்றுக்கொள்ள அரசாங்க தரப்பினர் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்றைய தினம் (01.04.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, கட்சியின் சில உறுப்பினர்களுக்குப் பணம் கொடுத்து, தமக்கான ஆதரவைப் பெற்றுக்கொள்ள அரசாங்க தரப்பினர் முயற்சித்து வருகின்ற போதிலும், அது சாத்தியப்படாது.
தேர்தலைச் சீர்குலைத்து வருகின்றது
நாட்டை கட்டியெழுப்ப நிதியில்லாத அரசாங்கம், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பணம் கொடுக்க முயற்சிக்கின்ற இந்த சூழ்நிலையில், ஆளும் தரப்பு உறுப்பினர்கள் நிதியில்லாமலேயே எதிர்க்கட்சியுடன் இணையத் தயாராக உள்ளனர்.
அத்துடன், அரசாங்கம் அரசியலமைப்பை மீறித் தேர்தலைச் சீர்குலைத்து வருகின்றது எனவும் அதையும் தாண்டி புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தைக் கொண்டுவந்து நாட்டின் மாணவர்களையும் சாதாரண மக்களையும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்த முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
