21வது திருத்தச் சட்டத்தை சீர்குலைக்கும் சதித்திட்டத்தில் பசில்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உத்தேச 21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை சீர்குலைக்கும் சதித்திட்டத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஈடுபட்டுள்ளதாக அனைத்து கட்சி போராளிகள் என்ற அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இந்த அமைப்பு காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட அமைப்பா என்பது தெரியவில்லை.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
21 வது அரசியலமைப்புச் சட்டத்தை சீர்குலைக்கும் பசில் ராஜபக்சவின் முயற்சியை தோற்கடிக்க வேண்டும். மக்களை கஷ்டங்களுக்கு உள்ளாக்கி, அராஜக தேசம் உருவாக காரணமாகவும் தன்னிச்சையான அநீதியான ஆட்சிக்கு வழிவகுத்த 20வது திருத்தச் சட்டம் தொடர்பில் நாட்டிற்குள் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு மற்றும் அதிருப்தி காரணமாக 21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.
அந்த திருத்தச் சட்டம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுகிறது. எனினும் தோல்வியான ஆட்சி, ஊழல் காரணமாக மக்களால் ஆட்சி அதிகாரத்தில் இருந்து துரத்தப்பட்ட ராஜபக்சவினரின் ஆவிகள், இந்த ஜனநாயக, மக்களுக்கு சார்பான அமைச்சரவை பத்திரம் நிறைவேற்றப்படுவதை தடுக்கவும் காலம் தாழ்த்தவும் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கவும் சதித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
இரட்டை குடியுரிமையாளரான பசில் ராஜபக்ச இந்த சதித்திட்டத்தை அரங்கேற்றி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மக்களின் உணர்வுகளை மதிக்காது நாட்டை அதளபாதாளத்திற்குள் தள்ளி, மக்களை நடுத்தெருவில் நிறுத்தி ராஜபக்ச குடும்ப ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்தும் குறுகிய நோக்கில் மேற்கொள்ளும் இந்த முயற்சியை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஜனாதிபதி மாத்திரமல்லாது பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் பசில் ராஜபக்ச என்ற அமெரிக்க பிரஜை முன்னெடுத்துள்ள இந்த அநாகரீகமான மற்றும் மோசமான திட்டத்தை தோற்கடித்து, 21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைவரும் பேதங்களை மறந்து இணைந்து செயற்படுவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.
மேலும் நாட்டுக்காக எனக் கூறி, புதிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்ட மக்கள் பிரதிநிதிகள், இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பில் மேற்கொள்ளும் சாதகமான மற்றும் செயற்பாட்டு ரீதியான தலையீடுகளை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் எனவும் அந்த அனைத்து கட்சி போராளிகள் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.