மணல் கொள்ளையர்களுக்கு சில அரசியல்வாதிகள் உதவி செய்து வருகின்றதாக குற்றச்சாட்டு
அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் வயிற்றில் அடிக்கும் மணல் கொள்ளையர்களுக்கு சில அரசியல்வாதிகள் உதவி செய்து வருகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம்சாட்டியுள்ளார்.
இவர்களின் இவ்வாறான செயலினால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர் என்பதை மறந்து செயற்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர், கித்துள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஊர் மக்களை சந்தித்து பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது, குறித்த பகுதி மக்களினால் மணல் லொறிகள் இந்த வீதி ஊடாக பயணிப்பதை நிறுத்துமாறு கோரி மனு ஒன்று இரா.சாணக்கியனிடம் கையளிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட அரசாங்க அதிபருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கித்துள் பகுதியில் பயணத்தடை காலத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ள சட்டவிரோத மண் அகழ்வுகள் காரணமாக மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பெரும் பாதிப்பினை எதிர்கொள்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கித்துள் பகுதியில் வடிச்சல் ஆற்றை ஊடறுத்து உழவு இயந்திரம் மற்றும் கனரக வாகனங்கள் மூலம் மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும், இதனால் தமது மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்து கித்துள் வடிச்சல் ஆற்றுப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு நடிவடிக்கையில் ஈடுபட்டனர்.
சுமார் 30 மீனவர்கள் விவசாயிகள் குறித்த ஆற்றுப்பகுதியில் சமூக இடைவெளியைப் பேணி தமது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குறித்த ஆற்றை ஊடறுத்து இரவு பகலாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும், இதனால் தாம் தொழிலுக்கு ஆற்றைக் கடந்து செல்ல பெரிதும் சிரமப்படுவதாகவும் ஆற்றுப்பகுதி ஆழமாகி செல்வதாகவும் தெரிவிக்கும் மீனவர்கள் தாம் செல்லும் வீதியும் நாசமாகியுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பில் தாங்கள் மண் அகழ்வில் ஈடுபடுவோரிடம் ஏதும் கேட்டால் அவர்கள் தங்களை தாக்குவதாகவும் மீனவர்கள் கவலை வெளியிட்டிருந்தனர்.
அத்துடன், கடந்த மூன்று வருடங்களாக இந்த பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாகவும் மீனவர்கள், விவசாயிகள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே இரா.சாணக்கியன் குறித்த பகுதிக்கு சென்று மக்களுடன் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



