நவால்னி மரணத்திற்குக் காரணமான இரசாயன ஆயுதங்களை தயாரித்த ரஷ்யர்களுக்கு பிரித்தானியா தடை
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியை விஷம் வைத்துக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட நச்சுப் பொருட்களை உருவாக்கியதாக, ரஷ்யாவின் இரண்டு ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் மூத்த அதிகாரிகள் மீது பிரித்தானியா திங்கட்கிழமை பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெறவுள்ள நேட்டோ (NATO) உச்சிமாநாட்டுக்கு முன்னதாக, பிரித்தானியா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இதேபோன்றதொரு தடை நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியமும் சமீபத்தில் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020-ஆம் ஆண்டில், சைபீரியாவில் இருந்து பயணித்த விமானத்தில் அலெக்ஸி நவால்னி திடீரென கடுமையான உடல்நலக்குறைவுக்கு ஆளானார்.
சோவியத் காலத்தில் உருவாக்கப்பட்ட இராணுவத் தரத்திலான 'நோவிசோக்' என்ற நரம்பு மண்டலத்தைத் தாக்கும் விஷம் அவருக்குக் கொடுக்கப்பட்டதாக மேற்கத்திய ஆய்வகங்கள் உறுதிப்படுத்தின.
தொடர் மறுப்பு
இதனைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டில் அவர் சிறையில் இருந்தபோது 'எபிபெடிடைன்' என்ற நச்சுத் தவளைகளில் இருந்து எடுக்கப்படும் விஷம் கொடுக்கப்பட்டு உயிரிழந்ததாக பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன.
இந்த இரண்டு நச்சுப் பொருட்களையும் தயாரிப்பதில் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீதே தற்போது பிரித்தானியா தடை விதித்துள்ளது. ஆனால், இந்த மரணத்தில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது.
ரஷ்யா தொடர்ந்து இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்றும், உலகப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றும் பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் யுவெட் கூப்பர் தெரிவித்துள்ளார்.
சாலிஸ்பரி நகரில் நோவிசோக் நச்சு முதல் சைபீரியாவில் எபிபெடிடைன் நச்சு வரை, அப்பாவி பொதுமக்களுக்கும் உக்ரைனுக்கும் மரணத்தையும் துயரத்தையும் ஏற்படுத்த ரஷ்யா இத்தகைய காட்டுமிராண்டித்தனமான வழிகளைப் பயன்படுத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக, 2018-ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் சாலிஸ்பரி நகரில் தஞ்சம் புகுந்திருந்த முன்னாள் ரஷ்ய இரட்டை உளவாளி செர்ஜி ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா ஆகியோர் மீதும் இதே 'நோவிசோக்' விஷம் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் அவர்கள் உயிர் பிழைத்த போதிலும், தவறுதலாக அந்த நச்சுப் பாத்திரத்தைத் தொட்ட டான் ஸ்டர்ஜஸ் என்ற பிரித்தானிய பெண்மணி உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் உத்தரவின் பேரில் ரஷ்ய உளவுத்துறை ஏஜெண்டுகளே நடத்தினார்கள் என்று பிரித்தானியாவின் பொது விசாரணை அறிக்கை கடந்த ஆண்டு முடிவு செய்தது. எனினும், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு எதிரான பொய்ப்பிரச்சாரம் என்று ரஷ்யா ஆரம்பம் முதலே மறுத்து வருகிறது.
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 14 மணி நேரம் முன்
சுக்கிர பெயர்ச்சி 2026: பண நஷ்டம், குடும்ப சண்டை! நிலைகுலையப் போகும் 4 ராசிகள்! தப்பிக்க பரிகாரங்கள்! Manithan