தச்சன்குளம் காணிகள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகள்
மிளகாய் செய்கைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள வவுனியா - தச்சன்குளம் காணிகள் தொடர்பாக வீண் வதந்திகள் பரப்பப்படுவதாக வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் என்.விஸ்ணுதாசன் தெரிவித்தார்.
வவுனியா - தச்சன்குளம் பகுதியில் சுழற்சிமுறையான பண்ணைத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள காணிகள் தொடர்பாக தெளிவூட்டும் விதமாக இன்று ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
எமது மாவட்டத்தில் மிளகாய் செய்கை மற்றும் அதனுடன் இணைந்தவாறு வேறு பயிர்செய்கைக்கான திட்டம் ஒன்று செயற்படுத்தப்படவுள்ளது. அத்திட்டத்திற்காக மூன்று முறிப்பு தச்சன்குளம் என்ற பகுதியில் அமைந்துள்ள மத்தியதர வர்க்க (எம்சிசி)காணி 5 வருடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த திட்டத்திற்கான உட்கட்டுமான வளங்கள் அனைத்தும் அரசின் மானிய அடிப்படையில் செயற்படுத்தப்படவுள்ளது. மிளகாய் தேவையை பூர்த்தி செய்வதே அதன் பிரதான நோக்கம். அத்துடன் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் விவசாய அபிவிருத்தி குழு கூட்டம்,காணி பயன்பாட்டு ஆணைக்குழு ஆகியவற்றில் பேசப்பட்டு உரிய வகையில் அனுமதி எடுக்கப்பட்ட பின்னரே இந்த செயற்பாடு இடம்பெறுகின்றது.
எனினும் குறித்த விடயம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஒரு சிலரால் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றது. எனவே பொறுப்புள்ள அதிகாரிகள் என்ற வகையில் மக்களிற்கு தெளிவூட்ட வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.
120 ஏக்கர் காணி இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த காணிகளை தலா அரை ஏக்கர் வீதம் 240 சமுர்த்தி குடும்பங்களிற்கு பிரித்து வழங்கவுள்ளோம். இதனால் அவர்களது வாழ்வாதாரமும் பூர்த்தியாவதுடன்,அரசின் நோக்கமும் நிறைவேறும்.
அத்துடன் காணிகளின் உரிமையை மாற்றுவது தொடர்பாக எந்த விடயங்களும் இடம்பெறவில்லை. இதேவேளை, அந்த காணிகளின் உரிமையாளர்களால் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டால் அது விடுவிக்கப்படும் என்று நாம் தெளிவாக அறிவித்துள்ளோம்.
அதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஐந்து வருடத்திற்கு இந்த காணியினை பயன்படுத்துமாறு பிரதேச செயலாளர் எமக்கு கையளித்திருக்கின்றார். அதன் உரிமை மாற்றம் செய்தல், கையளித்தல் போன்ற விடயங்களை தீர்மானிப்பவர் பிரதேச செயலாளரே.
அந்த விடயங்கள் எனது அதிகார
எல்லைக்கு அப்பாற்பட்டது. உரிமையாளரிடம் ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில்
பிரதேச செயலாளரிடம் சமர்ப்பித்தால் அவர் எமக்கு அறிவித்தல் வழங்குவார்.
எனவே இந்த விடயத்தில் எமக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை. பிழையான, போலியான
தகவல்கள் மக்களிற்கு செல்லக்கூடாது என்றார்.