வெளிநாட்டிலிருக்கும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு பணம் - புதிய திட்டம்
வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு பணம் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அந்த வகையில் பெற்றோர் வெளிநாடுகளில் பணிபுரியும் நிலையில் அவர்களின் 2 முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் பகல்நேர பராமரிப்பு நிலையங்களில் இருந்தால், அவர்களுக்கு மாதமொன்றுக்கு 10000 ரூபா கொடுப்பனவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் பற்றிய நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிடம் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
சமூகத்தில் எழும் பிரச்சினைகள்
அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் மற்றும் பிரதி அமைச்சர் நாமல் சுதர்சனவின் பங்கேற்புடன் அண்மையில் நாடாளுமன்றத்தில் இக்குழு கூடிய போதே அதிகாரிகள் இதனைத் குறிப்பிட்டுள்ளனர்.

சிறு பிள்ளைகளைக் கொண்ட பெண்கள் வெளிநாடு செல்வதால் சமூகத்தில் எழும் பிரச்சினைகள் குறித்து தலையிடுமாறு, இதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது மேலாளருக்கு (உள்நாட்டு விவகாரங்கள்) இந்த ஆலோசனைக் குழு வழங்கியிருந்த அறிவுறுத்தல்களின் முன்னேற்றம் குறித்து வினவிய போதே அதிகாரிகள் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளனர்.