சட்டவிரோத வாகன மோசடி விவகாரம் : ரோஹித அபேகுணவர்த்தனவின் புதல்வி தலைமறைவு
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தனவின் புதல்வி மெலனி அபேகுணவர்த்தன தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று முன்தினம் (19) களுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் புதல்வர் ரசிக விதான, மோசடியாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனமொன்றைத் தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனம் ஒன்றை மோசடியான முறையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்து பயன்படுத்துவதாக குறிப்பிட்டே பாணந்துறை வலான மோசடித் தடுப்புப் பொலிசார் அவரைக் கைது செய்திருந்தனர்.
எனினும் குறித்த WP KX 8137வாகனம் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரோஹித அபேகுணவர்த்தனவின் புதல்வி மெலனி அபேகுணவர்த்தனவின் பெயரில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் முதல் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்த ஆதாரங்களையும் மெலனி அபேகுணவர்த்தனவிடம் இருந்து வாகனத்தைக் கொள்வனவு செய்து பணம் செலுத்திய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான பொலிசாரிடம் சமர்ப்பித்துள்ளார்.
இருவரும் தலைமறைவு
எனினும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக ஜகத் விதானவின் புதல்வர் ரசிக விதானவுக்கு பிணை வழங்க பொலிசார் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் அவர் தற்போதைக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக ரோஹித அபேகுணவர்த்தனவின் புதல்வி மெலனி அபேகுணவர்த்தனவை பொலிசார் தேடி வருகின்றனர்.
அவர் தற்போதைக்கு வஸ்கடுவையில் உள்ள தனது சொந்த இல்லத்திலோ களுத்துறையில் உள்ள பெற்றோர் வீட்டிலோ இல்லை என்றும் மெலனியும் அவரது கணவரான தனுஷ் பிரியதர்சன ஆகிய இருவரும் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
மிக விரைவில் இருவரும் கைது செய்யப்படலாம் என்றும் பொலிசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



