வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் கைது!
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் தன்னாமுனை வட்டார பிரதேச சபை உறுப்பினர் வேலாயுதம் புவிதாசன் உள்ளிட்ட குழுவினரை வழிப்பறி சம்பவத்தில் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த தைபொங்கல் தினத்தில் (14) இரவு நேரத்தில் செங்கலடி சவுக்கடி பகுதியில் பிரதேச சபை உறுப்பினர் வேலாயுதம் புவிதாசன் உள்ளிட்ட 04 பேர் அவ்வழியால் வந்த குடும்பஸ்தர்களை மதுபோதையில் அவர்களை தாக்க முற்பட்டு அவர்களிடம் இருந்த பெறுமதியான தங்க நகைகளையும் அபகரிக்க முயன்றுள்ளனர்.
மதுபோதையில் இருந்த பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட குழுவினரிடம் இருந்து தப்பித்த கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் சவுக்கடி கடற்கரைவழியால் தப்பிச்சென்று கோட்டமுனை மைதான பணியாளர்களின் உதவியூடாக கொக்குவில் பொலிஸார் ஊடாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டை அடுத்து வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர் உட்பட்ட குழுவினரை கைது செய்து நீதிமன்றில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், எதிர்வரும் 21ஆம் திகதி வரை பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.