21 வருடங்களின் பின்னர் செப்பனிடப்படும் பாதை
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஒந்தாச்சிமடம், கோட்டைக்கல்லாறு பெரியகல்லாறு போன்ற கிராமங்களை கரையோரமாக இணைக்கும் பாதை 21 வருடங்களாக கவனிப்பாரற்று காணப்பட்ட நிலையில் செப்பனிடப்பட்டுள்ளது.
குறித்த வீதியை செப்பனிடும் பணி திங்கட்கிழமை (29.12.2025) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தவிசாளருக்கு விடுத்த கோரிக்கை
பெரியகல்லாறு மீனவர் சங்கம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளருக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைய, காடு மண்டிக்காணப்பட்ட 1.5 கிலோமீட்டர் நீளமுடைய இவ்வீதியின் புனரமைப்பு பணிகளை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் ஆரம்பித்து வைத்துள்ளார்.

தாம் பிடிக்கும் மீன்களை 1.5 கிலோமீட்டருக்கும் மேல் மீன்களை கூடைகளில் சுமந்து கொண்டுதான் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றோம். இதுவரை காலமும் இவ்வீதியைச் செப்பனிட்டுத் தருமாறு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வந்தோம். அது எமக்கு கைகூடவில்லை.
இந்நிலையில் தான் நாம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளருக்கு கோரிக்கையை முன்வைத்திருந்தோம்.கோரிக்கை முன்வைக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள்ளேயே இவ்வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்காக தவிசாளருக்கு தமது நன்றியைத் தெரிவிப்பதாக அப்பகுதி மீனவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

